You will be able to read this page in Tamil, if you have a Unicode Tamil font installed on your system.
மதுரைச் சொக்கநாதர்
தமிழ் விடுதூது
சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்
தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண் 1
டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு
விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே 2
செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு
கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற் 3
கூடல் புரந்தொருகாற் கூடற் புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் - வீடகலா 4
மன்னுமூ வாண்டில் வடகலையுந் தென்கலையும்
அன்னைமுலைப் பாலி னறிந்தோரும் - முன்னரே 5
மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லி னிசைந்தோரும் - தோன்றயன்மால் 6
தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரிற்
பாடி முடியாய்ப் படைத்தோரும் - நாடிமுடி 7
மட்டோலைப் பூவனையார் வார்ந்தோலை சேரர்த்தெழுதிப்
பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் - முட்டாதே 8
ஒல்காப் பெருந்தமிழ்மூன் றோதியருண் மாமுனியும்
தொல்காப் பியமொழிந்த தொன்முனியும் - மல்காச்சொற் 9
பாத்திரங்கொண் டேபதிபாற் பாய்பசுவைப் பன்னிரண்டு
சூத்திரங்கொண் டேபிணித்த தூயோரும் - நேத்திரமாம் 10
தீதில் கவிதைத் திருமா ளிகைத்தேவர்
ஆதி முனிவ ரனைவோரும் - சாதியுறும் 11
தந்திரத்தி னாலொழியாச் சார்வினையைச் சாற்றுதிரு
மந்திரத்தி னாலொழித்த வல்லோரும் - செந்தமிழிற் 12
பொய்யடிமை யில்லாப் புலவரென்று நாவலர்சொல்
மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள் 13
காடவருஞ் செஞ்சொற் கழறிற் றறிவாரும்
பாடவருந் தெய்வமொழிப் பாவலரும் - நாடவரும் 14
கல்லாதார் சிங்கமெனக் கல்விகேள் விக்குரியர்
எல்லாரு நீயா யிருந்தமையால் - சொல்லாரும் 15
என்னடிக ளேயுனைக்கண் டேத்தினிடர் தீருமென்றுன்
பொன்னடிக ளேபுகலாப் போற்றினேன் - பன்னியமென் 16
பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண்
டெஞ்சியழுக் கேறா வியற்கலையே - விஞ்சுநிறம் 17
தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம்
தீயாது சொல்விளையுஞ் செய்யுளே - வீயா 18
தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய்
வருகுலமோ ரைந்தாயும் வந்தாய் - இருநிலத்துப் 19
புண்ணியஞ்சே ருந்திப் புலத்தே வளிதரித்துக்
கண்ணிய வாக்காங் கருப்பமாய் - நண்ணித் 20
தலைமிடறு மூக்குரத்திற் சார்ந்திதழ்நாத் தந்தம்
உலைவிலா வண்ணத் துருவாய்த் - தலைதிரும்பி 21
ஏற்பமுதன் முப்பதெழுத் தாய்ச்சார் பிருநூற்று
நாற்ப தெழுத்தா நனிபிறந்தாய் - மேற்படவே 22
எண்முதலா கப்பகரு மீரா றெனும்பருவம்
மண்முதலோர் செய்து வளர்க்குநாட் - கண்மணிபோற் 23
பள்ளிக்கூ டத்தசையாம் பற்பலதொட் டிற்கிடத்தித்
தள்ளிச் சிறார்கூடித் தாலாட்டி - உள்ளிலகு 24
மஞ்சட் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் - மஞ்சரையே 25
பன்னியொரு பத்துப் பருவமிட்டு நீவளர்த்தாய்
உன்னை வளர்த்துவிட வொண்ணுமோ - முன்னே 26
நினையும் படிப்பெல்லா நின்னைப் படிப்பார்
உனையும் படிப்பிப்பா ருண்டோ - புனைதருநற் 27
செய்யுட்சொன்னான்குமுயர் செந்தமிழ்ச்சொல்லோர் நான்கும்
மெய்யுட் பொருளேழ் விதத்திணையும் - மையிலெழுத் 28
தாதியாப் பெட்டு மலங்கார மேழைந்தும்
பேதியாப் பேரெழின்மாப் பிள்ளையாய்ச் - சாதியிலே 29
ஆங்கமைசெப் பற்பண் ணகவற்பண் டுள்ளற்பண்
தூங்கற்பண் பட்டத்துத் தோகையரா - ஓங்குமனத் 30
தெண்கருவி யைந்தீன் றிடுநூற்று மூன்றான
பண்களும்பின் கல்யாணப் பாவையரா - எண்கொளும் 31
நற்றா ரகமா நவரசமாம் பிள்ளைகளைப்
பெற்றாய் பெருவாழ்வு பெற்றாயே - உற்றகலாப் 32
பண்கள்முதற் பெண்களொடும் பாலரொடு நாடகமாம்
பெண்கொலுவில் வீற்றிருக்கப் பெற்றாயே - மண்புகழ்த் 33
தாழ்விலா வட்டா தசவன் னனைகளெனும்
வாழ்வெலாங் கண்டு மகிழ்ந்தாயே - ஆழ 34
நெடுங்கோல வையையிலென் னேசர்மேற் பட்ட
கொடுங்கோல்செங் கோலாகக் கொண்டாய் -அடங்காத 35
எங்கோவே பத்தென் றியம்புதிசைக் குள்ளேநின்
செங்கோல் செலாத திசையுண்டோ - இங்கேயுன் 36
தேசமைம்பத் தாறிற் திசைச்சொற் பதினேழும்
மாசறநீ வைத்தகுறு மன்னியரோ - வீசு 37
குடகடலுங் கீழ்கடலுங் கோக்குமரி யாறும்
வடவரையு மெல்லை வகுத்தாய் - இடையிருந்த 38
முன்னுறுந்தென் பாண்டி முதற்புனனா டீறான
பன்னிரண்டு நாடுமப் பானாடோ - அந்நாட்டுள் 39
வையை கருவைமரு தாறுமரு வூர்நடுவே
ஐயநீ வாழு மரண்மனையோ - செய்யபுகழ் 40
மூவேந்தர் வாகனமா மூவுலகும் போய்வளைந்த
பாவேந்தேநீ பெரிய பார்வேந்தோ - காவேந்து 41
விண்ணவருங் காணரிய வேதா கமங்களெலாம்
புண்ணியனே யுன்றன் புரோகிதரோ - எண்ணரிய 42
நல்லபெருங் காப்பியங்க ணாடகா லங்காரம்
சொல்ல்லரசே யுன்னுடைய தோழரோ - தொல்லுலகிற் 43
சார்புரக்குங் கோவேநற் சாத்திரங்க ளெல்லாமுன்
பார்புரக்குஞ் சேனா பதிகளோ - வீரரதிர் 44
போர்ப்பா ரதமும் புராணம் பதினெட்டும்
சீர்ப்பாவே யுன்னுடைய சேனகளோ - பார்ப்பார்கள் 45
அக்கர வர்த்தியென லாமென்பார் பூலோக
சக்கர வர்த்தியுநீ தானன்றோ - சக்கரமுன் 46
பேந்தி நெடுந்தேர்மே லேறிச் சுழிகுளம்
நீந்தியோர் கூட நிறைசதுக்கம் - போந்து 47
மதுரங் கமழ்மாலை மாற்றணிந்து சூழும்
சதுரங்க சேனை தயங்கச் - சதுராய் 48
முரசங் கறங்க முடிவேந்தர் சூழ
வரசங்க மீதிருந்து வாழ்ந்தே - அருள்வடிவாய் 49
ஓங்குபுகழ் மூவ ரொருபா வொருப·தும்
ஆங்கவைசொல் வாதவூ ராளிசொல்லும் - ஓங்குமவன் 50
கூற்றா யரனெழுதுங் கோவையுங் கோதிறாய்
மாற்றா விரட்டைமணி மாலையும் - தேற்றமுறப் 51
பற்றா மிலக்கணநூற் பாவுநூற் பாவறிந்து
கற்றார் வழங்குபஞ்ச காப்பியமும் - கொற்றவருக் 52
கெண்ணிய வன்னனைக ளீரொன் பதுமறியக்
கண்ணிய மிக்கபெருங் காப்பியமும் - நன்ணியே 53
இன்புறு சேரனரங் கேற்றமகிழ்ந் தம்பலத்தான்
அன்புறுபொன் வண்னத்தந் தாதியும்- முன்பவர்சொல் 54
மாத்தமிழா மும்மணி மாலையும் பட்டினத்தார்
கோத்தணிந்த மும்மணிக் கோவையும் - மூத்தோர்கள் 55
பாடி யருள்பத்துப் பாட்டுமெட் டுத்துதொகையும்
கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும் - ஆடகமா 56
வெற்பனையார் மாதை விமலரிடத் தேயிருவர்
கற்பனையாற் சொன்ன கலம்பகமும் - முற்படையோ 57
டாடற் கலிங்கமழித் தாயிர மானைகொன்ற
பாடற் கரிய பரணியும் - கூடல் 58
நராதிபன் கூத்தனெதிர் நண்ணியோர் கண்ணிக்
கொராயிரம்பொ னீந்த வுலாவும் - பராவுமவன் 59
பிள்ளைத் தமிழுமுன்னாம் பேராத பல்குரவர்
வெள்ளத் தினுமிகுத்தோர் மெய்காப்ப - உள்ளத்து 60
வீரியஞ் செய்து வினையொழிய வேராச
காரியஞ் செய்யுங் கவிதையே - பாரில் 61
அரியா சனமுனக்கே யான லுனக்குச்
சரியாரு முண்டோ தமிழே - விரிவார் 62
திகழ்பா வொருநான்குஞ் செய்யுள்வரம் பாகப்
புகழ்பா வினங்கண்மடைப் போக்கா - நிகழ்வே 63
நல்லேரி னாற்செய்யு ணாற்கரணத் தேர்பூட்டிச்
சொல்லே ருழவர் தொகுத்தீண்டி - நல்லநெறி 64
நாலே விதையா நனிவிதைத்து நாற்பொருளும்
மேலே பலன்பெறச்செய் விக்குநாள் - மேலோரிற் 65
பாத்தனதாக் கொண்டபிள்ளைப் பாண்டியன் வில்லியொட்டக்
கூத்தனிவர் கல்ல்லாது கோட்டிகொளும் - சீத்தையரைக் 66
குட்டிச் செவியறுத்துக் கூட்டித் தலைகளெல்லாம்
வெட்டிக் களைபறிக்க மேலாய்த்தூர் - கட்டி 67
வளர்ந்தனைபான் முந்திரிகை வாழைக் கனியாய்க்
கிளர்ந்தகரும் பாய்நாளி கேரத் - திளங்கனியாய்த் 68
தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியேயென் முத்தமிழே - புத்திக்குள் 69
உண்ணப் படுந்தேனே யுன்னோ டுவந்துரைக்கும்
விண்ணப்ப முண்டு விளம்பக்கேள் - மண்ணிற் 70
குறமென்று பள்ளென்று கொள்வார் கொடுப்பாய்க்
குறவென்று மூன்றினத்து முண்டோ - திறமெல்லாம் 71
வந்தென்றுஞ் சிந்தா மணியா யிருந்தவுனைச்
சிந்தென்று சொல்லியநாச் சிந்துமே - அந்தரமேல் 72
முற்றுணர்ந்த தேவர்களு முக்குணமே பெற்றார்நீ
குற்றமிலாப் பத்துக் குணம்பெற்றாய் - மற்றொருவர் 73
ஆக்கிய வண்ணங்க ளைத்தின்மே லுண்டோநீ
நோக்கிய வண்ணங்க ணூறுடையாய் - நாக்குலவும் 74
ஊனரச மாறல்லா லுண்டோ செவிகளுண
வான நவரசமுண் டாயினாய் - ஏனோர்க் 75
கழியா வனப்பொன் றலததிக முண்டோ
ஒழியா வனப்பெட் டுடையாய் - மொழிவேந்தர் 76
வாங்கு பொருள்கோள் வகைமூன்றே பெற்றார்நீ
ஓங்குபொருள் கோள்வகையெட் டுள்ளாயே - பாங்குபெற 77
ஓர்முப்பா லன்றியைம்பா லுள்ளா யுனைப்போலச்
சீர்முப்ப தும்படைத்த செல்வரார் - சேரமான் 78
தன்னடிக் கண்டு தளைவிடுத்தா யேழ்தளையுன்
பொன்னடிக்குண் டென்பதென்ன புத்தியோ - என்னரசே 79
திண்பா வலர்க்கறிவாஞ் செந்தமிழாய் நின்றவுன்னை
வெண்பாவென் றோதுவது மெய்தானோ -பண்பேர் 80
ஒலிப்பாவே சங்கத் துகமூன் றிருந்தாய்
கலிப்பாவென் றோதல் கணக்கோ - உலப்பில் 81
இருட்பா மருண்மாற்றி யீடேற்று முன்னை
மருட்பாவென் றோதல் வழக்கோ - தெருட்பாப் 82
பொருத்தமொரு பத்துப் பொருந்துமுனைத் தானே
விருத்தமென்று சொல்லல் விதியோ - இருட்குவையை 83
முந்தியொளி யால்விலக்கு முச்சுடரென் பாருனைப்போல்
வந்தென் மனத்திருளை மாற்றுமோ - சிந்தா 84
மணிகொடையின் மிக்கதென்பார் வண்கொடையு முன்பேர்
அணியும் பெருமையினா லன்றோ - தணியும் 85
துலங்காரங் கண்டசரந் தோள்வளைமற் றெல்லாம்
அலங்கார மேயுனைப்போ லாமோ - புலங்காணும் 86
உன்னைப் பொருளென் றுரைக்குந் தொறும்வளர்வாய்
பொன்னைப் பொருளென்னப் போதுமோ - கன்னமிட்டு 87
மன்னர் கவர்ந்தும் வளர்பொருளே கைப்பொருள்கள்
என்ன பொருளுனைப்போ லெய்தாவே - நன்னெறியின் 88
மண்ணிற் புகழுருவாய் வாழ்வதற்கும் வாழுநர்
விண்ணிற்போய்த் தேவுருயாய் மேவுதற்கும் - எண்ணியுனைக் 89
கொண்டுபுகழ் கொண்டவர்க்கே கூடுமுனைக் கூடாத
தொண்டருக்குத் தென்பாலே தோன்றுமால் - தண்டமிழே 90
ஈங்குனது சங்கத்தா லீச ருயர்ந்தாரோ
ஓங்குமவ ரானீ யுயர்ந்தாயோ - பூங்கமல 91
வீடாளும் வாணியங்கை மேலே யிருந்தாயோ
ஏடாக வுன்மே லிருந்தாளோ - ஆடரவத் 92
தாழ்பாய லாளரை நீதானே தொடர்ந்தாயோ
சூழ்பாயோ டுன்னைத் தொடர்ந்தாரோ - வாழ்வேயென் 93
றோதிமுனி கேட்க வுனைமுருகர் சொன்னாரோ
சோதி யவரைநீ சொற்றனையோ - பேதியா 94
நேசருனக் கேபொருளாய் நின்றாரோ நீண்மதுரை
வாசருக்கு நீபொருளாய் வந்தாயோ - பாசமுறும் 95
என்செய்தி நீகண் டிரங்குவது நீதியல்லால்
உன்செய்தி நானோ வுரைசெய்வேன் - இன்சொல்லாய் 96
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தகவென்ற - சொற்குள்ளே 97
எல்லார்க்கும் புத்தி யியம்பிக் கரையேற்ற
வல்லா யுனக்குரைக்க வல்லேனோ - சொல்லியவுன் 98
ஈரடிக்குள் ளேயுலக மெல்லா மடங்குமெனின்
நேரடிக்கு வேறே நிலனுண்டோ - ஓரடிக்கோர் 99
ஆயிரம் பொன்னிறைக்கு மையரை வீதியிலே
போயிரந்து தூதுசொல்லப் போக்கினோ - யாயிருந்தும் 100
மாண்பாயோர் தூதுசொல்லி வாவென்பே னென்வருத்தம்
காண்பாயென் பெண்மதிநீ காணாதே - ஆண்பனைநற் 101
பெண்பனையா யாக்கினையாற் பெண்களிலே காரைக்கால்
வண்பதியா ரெளவையென வந்துதித்தாய் - நண்பார் 102
திலகவதி யாருடனே சென்மித்தாய் மாடக்
குலதவதி யானத்தார் கூடல் - பலதவஞ்சேர் 103
மேனியார் கண்டிகையும் வெண்ணீறுங் கண்டுருகும்
மானியார் தேசிகனா வந்துதித்தாய் - ஞானியார் 104
துங்க மகவாகத் தோன்றி வனப்பகைக்கும்
சிங்கடிக்குந் தாதையாய்ச் சீர்செய்தாய் - இங்குநீ 105
பெண்களெல்லாம் வாழப் பிறந்தமையா லென்மனத்திற்
புண்களெல்லா மாறப் புரிகண்டாய் - ஒண்கமலத் 106
தன்னந் தனைவிடுப்பே னன்னந்தா னங்கவரை
இன்னந்தான் கண்டறியா தென்பரே - மன்னெந்தாய் 107
அப்பாலோர் வண்டை யனுப்பி னவர்காமம்
செப்பாதே யென்றாற் றிகைக்குமே - தப்பாது 108
மானைப்போய்த் தூதுசொல்லி வாவென்பேன் வல்லியப்பூந்
தானைப் பரமர்பாற் சாராதே - ஏனைப்பூங் 109
கோகிலத்தை நான்விடுப்பேன் கோகிலமுங் காக்கையினம்
ஆகி வலியானுக் கஞ்சுமே - ஆகையினால் 110
இந்தமனத் தைத்தூதா யேகென்பே னிம்மனமுமு
அந்தமனோ தீதர்பா லண்டாதே - எந்தவிதம் 111
என்றென் றிரங்கினே னென்கவலை யெல்லாம்பொற்
குன்றனையா யுன்னுடனே கூறுகேன் - சென்றாலும் 112
பண்ணிய பத்தொன் பதினா யிரத்திருநூற்
றெண்ணியதொண் ணூற்றொன் றெனுந்தொடையாய் - நண்ணி 113
ஒருதொடை வாங்கி யுதவாயோ வோர்சே
விருதுடை யார்க்குநீ வேறே - தருமிக்கே 114
ஓர்வாழ்க்கை வேண்டி யுயர்கிழிகொள் வான்கொங்கு
தேர்வாழ்க்கை யென்றெடுத்த செய்தியும் - கீரன் 115
இசையா வகையி னியம்பினா னென்றே
வசையாடித் தர்க்கித்த வாக்கும் - இசையான 116
பாட்டுக் கிரங்கியொரு பாணனுக்குச் சேரலன்மேற்
சீட்டுக் கவிவிடுத்த சீராட்டும் - பாட்டியலில் 117
நாத்திரமான மேவுபொரு ணன்றா வறுபதெனும்
சூத்திரமாப் பாடியரு டோற்றமும் - மாத்திரமோ 118
உன்னோ டவர்விளையாட் டொன்றோ வடமதுரைக்
கந்நேர முன்பிறகே யார்வந்தார் - மன்னவன்மேற் 119
காரியார் நாரியார் கண்டகவி யைப்பகிர
வாரியிலாக் கானகத்தில் வந்தவரார் - நாரினொடும் 120
போற்றியுறும் பத்திரற்காப் போந்து கிழவுருவில்
தோற்றி விறகு சுமந்தவரார் - தேற்றியவற் 121
கீயரிய பொற்பலகை யிட்டவரார் மற்றவன்றன்
நேயமனை விக்கெதிரா நேர்ந்தவளைப் - போயவையில் 122
தள்ளியிசை தாபிக்கத் தக்கவரார் தென்மதுரைக்
குள்ளிருந்த சொக்கருனக் குள்ளன்றோ - எள்ளி 123
வடமொழியில் வேத வசனமே யீசர்
திடமொழியா மென்பார் சிலரே - அடரும் 124
பரசமய கோளரியாய்ப் பாண்டிநா டெங்கும்
அரசமய நீநிறுத்து மந்நாள் - விரசுநீ 125
ஆதிக்கண் வையையில்வே தாகமத்தைத் தாபித்தாய்
சோதிக்கி னேடகமே சொல்லாதோ - வேதத்தே 126
வாதவனங் கண்டா தடைத்தகத வந்திறந்தாய்
வேதவனங் கண்டால் விளம்பாதோ - வேதம் 127
அமிழ்தினுமிக் கென்னுமுனிக் கன்பருனைச் சொன்னார்
தமிழ்முனியென் னும்பேர்தா ராதோ - தமிழால் 128
அறம்பொரு ளின்பம்வீ டாரணர்சொன் னாரத்
திறம்பரமர் வாக்கேசெப் பாதோ - மறந்திடலில் 129
கற்பலகை யோதுமறை காணார்கீழ் நிற்கவுநீ
பொற்பலகை மேலிருந்தாய் போதாதோ - தற்பரரோ 130
டெண்ணிரந்த வாசியழைத் திட்டாய் சதுர்வேதப்
பண்ணிறைந்த வாசி பகராதோ - அண்ணலார் 131
தென்பா லுகந்தாடுஞ் செய்தியெல்லா முன்னிடத்தில்
அன்பாலென் றப்பாலு மாரறியார் - உன்பேர் 132
பழியார் திசைச்சொல்லார் பன்னார் திருவாய்
மொழியார் குழறி மொழிவார் - அழியா 133
உருவால வாயிருக்கு மோதரிய முத்தித்
திருவால வாயிருக்குஞ் செல்வர் - ஒருமால் 134
வடமதுரை யேறுமுன்னே வந்தவடி வென்னத்
தடமதுரை மீனுயர்த்த தாணு - படர்தீர்க்கும் 135
சத்திபுரத் தோர்பாற் றழைத்துமகிழ்ந் தோர்சீவன்
முத்திபுரத் தோர்பான் முளைதெழுந்தோர் - அத்திசைபோல் 136
ஆங்கோ ரிருநான் கயிரா வதஞ்சுமக்கும்
பூங்கோயிற் குள்ளுறைந்த புண்ணியனார் - பாங்காம் 137
இடம்பவன மீதாக விந்திரன்வந் தேத்தும்
கடம்பவன மீதிலுறை காந்த - அடும்பேர் 138
அலகம் பரிக்கு மரியார் முடிவேய்ந்
துலகம் பரிக்குமுறை யுள்ளார் - பலநாளும் 139
நின்றவூர்ப் பூசலார் நீரடிவெ லாநினைந்து
குன்றுபோ லேசமைத்த கோயிலும் - நன்றிதரும் 140
தாயான கங்கைமுடி தான்குளிரக் கண்ணப்பர்
வாயா லுமிழ்ந்ததிரு மஞ்சனமும் - தூயமழைத் 141
துன்பார் திருக்குறிப்புத் தொண்டர் துணித்துறையில்
வன்பா யளித்தபரி வட்டமும் - இன்பாத் 142
தணிவரிய மானக்கஞ் சாறணார் சாத்தும்
மணிமுடிசூழ் பஞ்ச வடியும் - அணிவிடையார் 143
காமன்பான் முன்சேந்த கண்போல மூர்த்தியார்
தாமன்பான் முன்சேர்த்த சந்தனமும் - பூமன்போற் 144
காக்கு மரிபுனைந்த கண்மலருங் காதலொடு
சாக்கியர்தாஞ் சாத்தியபூந் தண்மலரும் - போக்கியமா 145
ஆக்கிய மாற னமுதுஞ் சிறுத்தொண்டர்
மார்க்கறியுஞ் தாயர்தரு மாவடுவும் - நீக்கரிய 146
காரா ரிரவிற் கணம்புல்லர் தம்முடிமேற்
சீராக வேற்றியசெந் தீபமும் - ஆரால் 147
அமைத்து வணங்கலுறு மங்கணர்க்குப் பூசை
சமைத்து வணங்கத் தகுமோ - உமைக்கன்பர் 148
அற்சனைபாட் டேயாமென் றாரூரர்க் காதியிலே
சொற்றமிழ் பாடுகெனச் சொன்னமையாற் - சொற்படியே 149
செய்தநால் வேதந் திகைத்தொதுங்கப் பித்தனென்று
வைதாய்நீ வைதாலும் வாழ்த்தாமே - மெய்தான் 150
இருந்தமிழே யுன்னா லிருந்தே னிமையோர்
விருந்தமிழ்த மென்றாலும் வேண்டேன் - வருந்தினன்மால் 151
வெல்லானை தின்ற விளங்கனியா னேன்விரகக்
கல்லானை தின்ற கரும்பானேன் - நல்லவரைத் 152
தேடுநிழற் சிந்தனையிற் றேம்பினேன் வெம்பனியால்
வாடிய செந்தா மரையொத்தேன் - ஓடமிசைக் 153
கொள்ளம்பூ தூர்வெள்ளக் கொள்ளைகடந் தாயென்மால்
வெள்ளங் கடத்திவிட வேண்டாவோ - தள்ளென்று 154
மாறிட்ட சாக்கியரை வன்கழுவே றச்செய்தாய்
சீறிட்ட வேளையது செய்யாயோ - நீறிட்டே 155
அங்கரும்பின் கூனொழித்தா யன்றுவழு திக்குமதன்
செங்கரும்பின் கூனொழியச் செய்யாயோ - அங்கமுறு 156
வெப்புநோய் தீர்க்காயவ் வேந்தனுக்கென் வெவ்விரக
வெப்புநோய் தீர்க்க விரும்பாயோ - தப்பலவே 157
சாக்கிய ரிட்டநஞ்சு தன்னையமு தாக்கினையின்
றாக்கிய நஞ்சையமு தாக்காயோ - நீக்கரிய 158
வெந்தீக்குள் ளேகிடந்தும் வேவாயென் பார்காமச்
செந்தீச் சுடாதிருக்கச் செய்யாயோ - வந்து கொங்கில் 159
அப்பனியால் வாடாதே யார்க்குந் துயரொழித்தாய்
இப்பனியால் வாடா திரங்காயோ - அப்பரை 160
மைக்கடல்கொல் லாதபடி வன்கன் மிதப்பித்தாய்
அக்கடல்கொல் லாமலுற வாக்காயோ - மிக்குயர்ந்த 161
மன்றிற் பனைவடிவ மாற்றினா யப்பனைமேல்
அண்றிற்புள் வேறொருபுள் ளாக்காயோ - தொன்றுதொட்டுத் 162
தென்பொதியிற் சாந்தினொடு தென்றலுற வாய்வந்தாய்
அன்புறவென் னோடுமுற வாக்காயோ - முன்பிருந்து 163
பாடுமிசை யெல்லாமுன் பாவையராச் சேர்ந்தாயென்
னோடுமுனி யாதிருக்க வோதாயோ - பாடலாற் 164
சின்னமொடு காளஞ் சிவிகைபந்தர் முத்தடைந்தாய்
பொன்னே சுடாதணியப் பூட்டாயோ - முன்னிறந்தாள் 165
அங்கத்தைப் பூம்பாவை யாக்கினா யாதலினென்
அங்கத்தைப் பூம்பாவை யாக்காயோ - மங்கத்தான் 166
மாய்ந்தாலு மாமுதலை வாய்ப்பிள்ளை யைப்படைத்தாய்
மாய்ந்தாலும் பின்படைக்க வல்லையே - ஏய்ந்தவுரை 167
செய்தாளென் றென்சொல் செவியோர்ந்து செல்வாயிங்
கெய்தாம லங்கிருக்க வெண்ணாதே - பொய்தீரத் 168
தேசிவருஞ் சொக்கருக்கே சென்றிருந் தாங்கவரைப்
பேசிவருந் தூது பிறிதுண்டோ - நேசமொடு 169
தைவரினுங் காட்டத் தகதாரைத் தாதையர்க்குக்
கைவிரலாற் காட்டியருள் காளையும் - தெய்வவெள்ளிப் 170
புதர வானவரைப் போற்றமுயன் றையாற்றில்
ஆதரவாய்க் கன்ட வரசரும்- நாதர் 171
அளந்தருள்செம் பொன்னைமணி யாற்றிலிட் டாரூர்க்
குளந்தனிலே தேடியருள் கோவும் - வளந்திகழும் 172
காளத்தி யில்வந்த காட்சிகயி லாயத்து
நீளத்தான் சொற்றவனு நீயன்றோ - கேளப்பால் 173
அம்மைதமக் கில்லாதா ரம்மைதா மாவிருந்தார்
அம்மையென்று முன்னுரைத்த வம்மையாய்த் - தம்மெதிரே 174
வெள்ளானை மேற்கொண்ட வேந்தர் வரவிடுத்த
வெள்ளானை மேற்கொன்ட வித்தகராய்த் - தள்ளாது 175
விஞ்சுவரால் வண்ணனை வெண்ணீற்ற ரென்றுபணிந்
தஞ்சலிசெய் தாட்செய்த வன்பராய்ச் - சஞ்சரியாத் 176
தென்கையி லாயவரைச் செல்வர்பாற் சென்றாயே
உன்கையி லாகாத தொன்றுண்டோ - என்கையால் 177
ஆயு மவள்பாகத் தன்பரு முக்கிரராம்
சேயும் புரந்திருக்குந் தென்மதுரை - வாயினிய 178
செவ்வழியே செல்வாய்நீ செல்வழியி னல்வழிதான்
எவ்வழி யென்றா லியம்பக்கேள் - எவ்வழியும் 179
வெல்வா யுனைநினைந்து வேயுறு தோளியென்று
செல்வார்தங் காரியஞ்சித் திக்குமே - செல்வாய் 180
தடையுண்டோ வையாறு தன்னிலே பொன்னி
இடைவிலங்கச் சென்றதறி யேனோ - இடையிலே 181
பாலைநில நெய்தலாப் பண்ணினா யின்னுமதைச்
சோலைநில மாக்குவைநான் சொல்லுவதென் - மேலானார் 182
கூறும் பொதிசோறு கொண்டு வரினுனக்கு
வேறும் பொதிசோறு வேண்டுமோ - வீறாகக் 183
கற்பார் பொருள்காணார் காசுபணங் காணிலுனை
விற்பா ரவர்பானீ மேவாதே - கற்றாரை 184
எள்ளிடுவார் சொற்பொருள்கேட் டின்புறார் நாய்போலச்
சள்ளிடுவார் தம்மருகே சாராதே - தெள்ளுதமிழ்ப் 185
பாயிரமுன் சொன்ன படிபடியா மற்குழறி
ஆயிரமுஞ் சொல்வார்பா லண்டாதே - ஆய்தருநூல் 186
ஓதி யறியாத வொண்பே தையருடனே
நீதி முறையா நிகழ்த்துநூல் - பேதமையாம் 187
காணாதாற் காட்டுவான் றான்காணான் கண்ணெதிரே
நாணா திராதே நவிலாதே - வீணாக 188
ஆற்றி னளவறிந்து கல்லா தவையஞ்சும்
கூற்றினர்பா லேகாதே கூடாதே - போற்றாரை 189
வேண்டாதே கேடில் விழுச்செல்வங் கல்வியென்று
பூண்டாய்நீ தானே பொருளன்றோ - ஆண்ட 190
வலவா நலவா வடுதுறையி லுன்போல்
உலவாக் கிழிபெற்றா ருண்டோ - நலவிருப்ப 191
தாக்கவரு செங்கலைப்பொன் னாக்கினாய் மண்முழுதும்
மாக்கனக மாக்கிவிட வல்லையே - நோக்குபுகார் 192
பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டாற் பதினாறு
கோடிபொன் கொண்டதுநின் கொற்றமே - தேடியருள் 193
நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்டதிருக்க் கண்டாயே - கல்லார்பால் 194
ஏகாதே யன்பிலா ரிந்திரன்போல் வாழ்ந்தாலும்
போகாதே யங்கே புசியாதே - மாகவிஞர் 195
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றரிந் தாரென்னும் - மாமகிமை 196
சேர்ந்ததுன்பா லன்றோ திருப்பாற் கடலமுதம்
ஆர்ந்தவர்க்கல் லாதுபசி யாறுமோ - சேர்ந்துன்னை 197
நம்பாதார் வீதி நணுகாதே நல்லார்கள்
தம்பா லிருந்து தரித்தேகி - வம்பாகப் 198
பின்போ யமனோடப் பேர்ந்தோடும் வையையிலே
முன்போ யெதிர்போய் முழுகியே - அன்போடே 199
தாழ்ந்து நீள்சத்தந் தனைக்கற்றா ருள்ளம்போல்
ஆழ்ந்த வகழி யகன்றுபோய்ச் - சூழ்ந்துலகில் 200
மேன்மே லுயர்ந்தோங்கு வேதம்போன் மேலாக
வான்மே லுயர்ந்த மதில்கடந்து - போனால் 201
மிருதிபுரா ணங்கலைபோல் வேறுவே றாக
வருதிரு வீதிசூழ் வந்தே - இருவினையை 202
மோதுஞ் சிவாகமம்போன் முத்திக்கு வித்தாக
ஓதுந் திருக்கோயி லுட்புகுந்து - நீதென்பால் 203
முன்னே வணங்கி முறையினபி டேகமுனி
தன்னேயம் போலாந் தளவிசையும் - தன்னடைந்து 204
தேறும் படிவர் சிவலோகஞ் சேர்ந்திருக்க
ஏறும் படிநிறுத்து மேணிபோல் - வீறுயர்ந்த 205
கோமேவு கோபுரமுங் கூடலின்மேன் முன்னொருநான்
மாமேகஞ் சேர்ந்ததுபோன் மண்டபமும் - பூமேவும் 206
மட்டளையும் வண்டெனப்போய் மாளிகைப் பத்தியறைக்
கட்டளையுங் கண்டு களிகூர்ந்தே - இட்டமணிச் 207
சிங்கா தனத்திற் சிறந்ததிரு வோலக்கம்
எங்கா கிலுமொருவர்க் கெய்துமோ - பைங்கழல்சூழ் 208
தேங்கமலத் தேசு தெரிசனஞ் செய்தவர்க்கே
பூங்கமலக் கண்கொடுத்த புத்தேளும் -ஓங்கமல 209
மையி லடியில் வணங்காத் தலையொன்றைக்
கையி லளித்த கடவுளும் - மொய்யிழந்த 210
மானந் தனக்கு வகுந்தகடம் பாடவிக்கு
மானந் தனைவகுத்த வானவனும்- தேனங் 211
கணிமலர்த்தா ணெஞ்சூ டழுத்தியழுத் தாதே
மணிமுடிக ணீக்கி வணங்கக் - கணநாதர் 212
ஓதுதுனி யோடுசின முற்றபகை செற்றமுரட்
போத முனிவர் புடைசூழத் - தீதில் 213
அரிய திசப்ப்பால ரத்தமுத றாங்கித்
தெரிசனக்கண் பார்த்தேவல் செய்யப் - பரவியே 214
முன்னிருவ ரெண்மரொடு மொய்த்த பதினொருவர்
பன்னிருவர் நின்று பணிசெய்ய - முன்னே 215
நதிக ளெனக்கண்டு நந்திபிரம் போங்க
உதவவிரு பாலி னொதுங்கிப் - பதினெண் 216
குலத்தேவர் தம்மகுட கோடிபதி னெட்டு
நிலத்தோர் முடியா னெரிய - நிலத்தே 217
செருக்குஞ் சினேகமுற்ற தேவி யுடனே
இருக்குஞ் சினகரத்து ளெய்திப் - பொருக்கெனப்போய் 218
என்தாயென் றேத்து மிடைக்காடன் பின்போன
செந்தா மரைபோற் றிருந்தாளும் - வந்துமனம் 219
தேறிக் கழுத்தரியத் தென்பாண்டி நாடனுக்கு
மாறித் திரும்பு மணிக்குறங்கும் - சீறிப் 220
பணிக்கற்கு மாறாப் படையுடைவாள் சேர்த்து
மணிக்கச் சுடுத்த மருங்கும் - துணிக்கமையத் 221
தொண்டுபடு வந்தி சொரிந்திடும்பிட்ட டள்ளியள்ளி
உண்டுபசி தீர்த்த வுதரமும் -அண்டுமொரு 222
தாய்முலைப்பா லுண்டறியாத் தாம்பன்றிக் குட்டிகளின்
வாய்முலைப்பா லூட்டியபூண் மார்பமும் - தூயமுடி 223
ஆணிக் கனகத் தழுத்த வழுதிக்கு
மாணிக்கம் விற்ற மலர்க்கையும் -காணிக்காப் 224
பூம்படலை யாத்திப் புனைமலரைப் பூணாமல்
வேம்பலரைப் பூண்ட வியன்புயமும் - ஓம்புகொடி 225
வாதிற் கரிக்குருவி வாழ்தற் குபதேசம்
காதிற் புகன்ற கனிவாயும் - தீதில்சொல் 226
வாயிலா நீயிருந்து வாழும் படியுனக்குக்
கோயிலாத் தந்த குழைக்காதும் - போய்வணிகப் 227
பெண்ணீராள் கண்ணீர் பெருகத் தழுவித்தம்
கண்ணீரா லாற்றியருள் கண்களும் - தெண்ணீரார் 228
பண்சுமந்த பாட்டினுக்கும் பாவைதந்த பிட்டினுக்கும்
மண்சுமந்த சோதி மணிமுடியும் - கண்சுமந்து 229
கண்டுகளி கூர்ந்து கசிந்துகசிந் துள்ளுருகித்
தொண்டுசெய்து தாண்முடிமேற் சூடியே - மண்டும் 230
உடுக்கலந்தங் கோக்குலமென் றுற்றறிந்தா லென்ன
அடுக்கிலங்கு தீபமெதி ராகக் - கடுத்திடேல் 231
வெங்கதிருண் டுன்குலத்து வெண்மதியுண் டென்னல்போல்
தங்கவா ரத்தீபந் தாமசையத் - துங்கவிடை 232
ஏங்குமொரு மீனுயர்த்தி னெங்கிருப்பே னென்பதுபோல்
ஆங்கிட தீபமழன்றாட - நீங்கா 233
தருடா ம்ருகத்துரு வானார்க் குவந்தே
புருடா ம்ருகத்தீபம் போற்ற - மருவார் 234
வருகுலத்தார் பானு வரனடுக்குற் றென்ன
அருகுலவுந் தட்ட தசைய - இருசுடர்க்கும் 235
சொக்கருணைத் தானே சுடரென்று காட்டுதல்போல்
அக்கரா லத்தியொளி யாய்விளங்கத் - தக்கவனோ 236
டெற்கும் பயந்தொளித்தா ரென்றுகங்கை தேடுதல்போற்
பொற்கும்ப தீபமெதிர் போய்வளையச் - சொற்குருகும் 237
அற்பூரத் தொண்டர்க் கருண்முத்தி யீதெனல்போற்
கற்பூரத் தட்டிற் கனல்வாய்ப்பப் - பொற்பாக 238
நங்குலத்தும் வந்துதித்தார் நாதரென்று பானுமகிழ்ந்
தங்குறல்போற் கண்ணாடி யங்கணுற - இங்கரசர் 239
எங்குலத்தா ராயினா ரென்றுபிறை தோற்றுதல்போல்
துங்கமுடி மேற்குடைவெண் சோதிவிடப் - பொங்கியெழும் 240
முந்துகடல் வெண்டிரைகண் முன்னேமா மிக்காக
வந்தவன்போல் வெண்சா மரையிரட்ட - விந்தைசெயும் 241
ஆடரவச் சித்தரிவ ராதலினா லாலவட்டம்
நீடரவம் போலவெதிர் நின்றாட - நாடகலா 242
வாலநறுந் தென்றனம் மன்னரென்று காண்பதுபோற்
கோல விசிறி குளிர்ந்தணுகக் - காலைத் 243
திருவனந்தன் முன்னாகச் சேவிக்குங் காலத்
துருவனந்த தேவ ருடனே - மருவியெதிர் 244
போற்றுவாய் நீயும் புரோகிதரை முன்னனுப்பித்
தோற்றரவு செய்து துதித்தற்பின் - ஆற்றல் 245
அரிய சிவாகமத்தோ ராதிசைவர் தம்பால்
உரிய படையா வொதுங்கி - அருமையுடன் 246
மூவர் கவியே முதலாங் கவியைந்தும்
மூவராய் நின்றார்தம் முன்னோதி - ஓவாதே 247
சீபாத மெண்ணாத தீயவினைப் பாவிசெய்த
மாபாத கந்தீர்த்த மாமருந்தைத் - தீபமணிப் 248
பைந்நாகஞ் சூழ்மதுரைப் பாண்டியனே பாரமணிக்
கைந்நாகஞ் சூழ்கோயிற் கண்மணியே - மன்னாக 249
மைக்கட் கரும்பை மருவிப் பிரியாத
முக்கட் கனியே முழுமுதலே - மிக்கபுனற் 250
கங்கா நதிகக்கிறையே கன்னித் துறைக்கரசே
சிங்கா தனத்துரையே செல்வமே - எங்கோவே 251
நாடவினை யாடிவந்த நற்பாவை போலடியார்
கூடவிளை யாடிவந்த கோமானே -தேடரிய 252
சிந்தைமகிழ்ந் தன்புடையார் தேடியநா ளோடியெதிர்
வந்தவிளை யாட்டினிமேல் வாராதோ - வந்தருளால் 253
பாவும் புகழ்சேர் பழிக்கஞ்சி யென்றுலகில்
மேவும் பெயரினிமேல் வேண்டாமோ - ஆவலினால் 254
புக்குவந்தர் தம்மேற் பொடிபோட் டுளமயக்கிற்
சொக்கலிங்க மென்றெவருஞ் சொல்லாரோ - இக்கணைத்த 255
அங்கைவே டானே யரசளா வுஞ்சிறிய
மங்கைதனைக் கோட்டிகொளல் வல்லமையோ - கங்கையெலாம் 256
நல்லமைக்கண் ணூடுவர நல்குதியே னங்களையெல்லாம்
வல்லசித்த ரென்றழைக்க மாட்டாளே - நல்லவர்போல் 257
மைக்குவளைக் கண்ணி வளைகவர்ந்து மங்கையர்தம்
கைக்குவளை விற்கக் கனக்குண்டோ - திக்குவளை 258
தோட்டாரும் வேம்பாய்த் தொடர்ந்துதொடர்ந் தேயொருதார்
கேட்டாரும் வேம்பாகக் கேட்டோமே - நாட்டமுற 259
வேளையெரித் தாய்க்கியல்போ மின்னார் கலைகவர்தல்
காளை யிடையிருந்து கற்றதோ - மீளாது 260
சென்றிலகு நாரையன்று சென்றசிவ லோகத்தே
இன்றெனையங் கெய்தவிட லாகாதோ - அன்றியழற் 261
குன்றே விருத்த குமார ரிளம்பாலர்
என்றேயோர் பெண்வீட் டிருக்கலாம் - சென்றொருநாள் 262
பொன்னனையாள் வீடும் புகுந்திருக்க லாமெனினென்
பொன்னையாள் வீடும் பொருந்தாதோ - என்னுமொழி 263
எல்லாந் திருச்செவியி லேறும் படியுரைக்க
வல்லாயுன் போலெவர்க்கு வாய்க்குமே - நல்லான் 264
கருணைவிழி யாளங் கயற்கண்ணி தன்னோ
டருள்புரிய வாழ்ந்திருங்கு மையர் - திருமதுரை 265
தானே சிவராச தானியென்று வீற்றிருந்தால்
தேனேநம் பாக்கியத்தின் செய்தியே - ஆனமையால் 266
அந்தரலோ கத்தின்மே லானதிரு வாலவாய்ச்
சுந்தர மீனவனின் சொற்படியே - வந்து 267
துறவாதே சேர்ந்து சுகாநந்த நல்க
மறவாதே தூதுசொல்லி வா. 268
---
My other pages:
Last updated: 28th December, 1998.
Mail your comments to: Anbumani.
S