பத்திரகிரியார் பாடல்கள் மெய்ஞ்ஞானப் புலம்பல் காப்பு முக்திதரும் ஞான மொழியாம் புலம்பல் சொல்ல அத்தி முகவன்தன் அருள் பெருவது எக்காலம் ? நூல் ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலன்களைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம் ? 1 நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து தேங்காக் கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம் ? 2 தேங்காக் கருணைவெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு வாங்காமல் விட்டகுறை வந்தெடுப்பது எக்காலம் ? 3 ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல் மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம் ? 4 மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக் காயா புரிக்கோட்டை கைக் கொள்வது எக்காலம்? 5 காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு மாயா அனுபூதி வந்துஅடுப்பது எக்காலம் ? 6 சேயாய்ச் சமைந்து, செவிடு ஊமை போல் திரிந்து பேய்போல் இருந்து உன் பிரமை கொள்வது எக்காலம் ? 7 பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத் தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம் ? 8 கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி மால்காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம் ? 9 பெண்ணினல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழிந்து கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்பது எக்காலம் ? 10 வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம் ? 11 ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல் தேறாத சிந்தைதனைத் தேற்றுவதும் எக்காலம் ? 12 தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம் ? 13 மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்; தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம் ? 14 பாவி என்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்; ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம் ? 15 உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும் புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம் ? 16 வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும் வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம் ? 17 பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும் விட்டுவிட்டு உன்பாதம் விரும்புவதும் எக்காலம் ? 18 ஆமைவரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல் ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம் ? 19 தண்டிகையும், சாவடியும், சாளிகையும், மாளிகையும் கண்டு களிக்கும் கருத்தொழிவது எக்காலம் ? 20 அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம் செத்த சவம்போல் திரிவதினி எக்காலம் ? 21 ஒழிந்த தருமத்தினை வைத்துள்ளெலும்பு வெள்ளெலும்பாய்க் கழிந்த பிணம்போல்இ ழிந்து காண்பதினி எக்காலம் ? 22 அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து கெர்ப்பத்தில் வீழிந்து கொண்ட கோளறுப்பது எக்காலம் ? 23 கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன் உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம் ? 24 தூண்டு விளக்கணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தாற்போல் மாண்டு பிழைத்துவந்த வகை தெரிவது எக்காலம் ? 25 தூரியினில் மீன்போல் சுழன்று மனம் வாடாமல் ஆரியனைத் தேடி அடிபணிவது எக்காலம் ? 26 எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத விடுபெற வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம் ? 27 அவவேடம் பூண்டு இங்கு அலைந்து திரியாமல் சிவவேடம் பூண்டு சிறந்திருப்பது எக்காலம் ? 28 அண்டருக்காய் நஞ்சருந்தி அம்பலத்தில் ஆடுசிவன் தொண்டருக்குத் தொண்டன் எனத் தொண்டு செய்வது எக்காலம் ? 29 பன்றி வடிவெடுத்துப் பார் இடந்து மால்காணாக் குன்றில் விளக்கொளியைக் கூறுவதும் எக்காலம் ? 30 தித்திக்கும் தெள்ளமிழ்தை சித்தாந்தத்து உட்பொருளை முத்திக்கு வித்தை முதல் நினைப்பது எக்காலம் ? 31 வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம் ? 32 மற்றிடத்தைத் தேடி என்றன் வாழ்நாளைப் போக்காமல் உற்றிடத்தைத் தேடி உறங்குவதும் எக்காலம் ? 33 இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே மன்றுளோர் சொல்லும் வகையறிவது எக்காலம் ? 34 கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல் பஞ்சா மிர்தம் பருகுவதும் எக்காலம் ? 35 செஞ்சலத்தினால் திரண்ட சென்ன மோட்சம்பெறவே சஞ்சலத்தை விட்டு உன் சரண் அடைவது எக்காலம் ? 36 கும்பிக்கு இரைதேடிக் கொடுப்பார் இடம்தோறும் வெம்பித் திரிகை விடுப்பது இனி எக்காலம் ? 37 ஆடுகின்ற சூத்திரம் தான் அறுமளவுமேதிரிந்து போடுகின்ற நாள் வருமுன் போற்றூவதும் எக்காலம் ? 38 நவசூத் திர வீட்டை நான்என்று அலையாமல் சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவது எக்காலம் ? 39 பரந்து மலசலங்கள் பாயும் புழுக்கூட்டை விட்டுக் கரந்துன் அடிஇணைக்கீழ்க் கலந்து நிற்பது எக்காலம் ? 40 இம்மைதனில் பாதகனாய் இருவினைக்கீடாய் எடுத்த பொம்மைதனப்போட்டு உன்னைப் போற்றீ நிற்பது எக்காலம் ? 41 உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளு முன்னே அப்பிட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம் ? 42 சேவைபுரிந்து சிவரூபக் காட்சிகண்டு பாவைதனைக் கழித்துப் பயன் அடைவது எக்காலம் ? 43 காண்டத்தை வாங்கிக் கருமேகம் மீண்டது போல் பாண்டத்தை நீக்கிப் பரம் அடைவது எக்காலம் ? 44 சோற்றுத் துருத்திதனைச் சுமந்து அலைந்து வாடாமல் ஊத்தைச் சடம்போட்டு உனை அடைவது எக்காலம் ? 45 தொடக்கைச் சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல் உடக்கைக் கழற்றி உனைஅறிவது எக்காலம் ? 46 ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல் ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் ? 47 கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத பார ரகசியத்தைப் பார்த்திருப்பது எக்காலம் ? 48 புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய் எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம் ? 49 தக்கும்வகைக்கு ஓர்பொருளும் சாராம லேநினைவில் பக்குவம்வந்துன் அருளைப் பார்டிதிருப்பது எக்காலம் ? 50 பருவத் தலைவரோடும் புல்கியின்பம் கொள்வதற்குத் தெரிவைப் பருவம் வந்து சிக்குவதும் எக்காலம் ? 51 தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டெல்லாம் அறிந்து குருவை அறிந்தேநினைத்துக் கும்பிடுவது எக்காலம் ? 52 வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி யம்பழமும் ஓடும்போல் ஆவதினி எக்காலம் ? 53 பற்றற்று நீரில் படர்தா மரை இலைபோல் சுற்றத்தை நீக்கிமனம் தூர நிற்பது எக்காலம் ? 54 சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம் சொல்லாரக் கண்டு எனக்குச் சொல்வதினி எக்காலம் ? 55 மருவும் அயல்புருடன் வரும் நேரம் காணாமல் உருகுமன்ம் போல் என் உளம் உருகுவதும் எக்காலம் ? 56 தன்கணவன் தன் சுகத்தில் தன்மனம் வேறானது போல் என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவதும் எக்காலம் ? 57 கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல் தேடித் தவிப்பவன் போல் சிந்தை வைப்பது எக்காலம் ? 58 எவ்வனத்தின் மோகம் எப்படி யுண்டப்படிபோல் கவ்வனத் தியானம் கருத்து வைப்பது எக்காலம் ? 59 கண்ணால் அருவி கசிந்து முத்துப் போல் உதிரச் சொன்ன பரம்பொருளை எண்ணுவது எக்காலம் ? 60 ஆகம் மிகவுருக அன்புருக என்புருகப் போகஅனுபூதி பொருந்துவதும் எக்காலம் ? 61 நீரில் குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுநின் பேரின்பக் கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம் ? 62 அன்பை உருக்கி அறிவை அதன் மேல்புகட்டித் துன்ப வலைப்பாசத் தொடக்கறுப்பது எக்காலம் ? 63 கருவின் வழி அறிந்து கருத்தைச் செலுத்தாமல் அருவி விழிசொரிய அன்பு வைப்பது எக்காலம் ? 64 தெள்ளத் தெளிய தெளிந்த சிவானந்ததேன் பொழியப் பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம் ? 65 ஆதார மூலத்தடியில் கணபதியைப் பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம் ? 66 மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக் கண்வளர்த்துப் பார்த்துள்ளே கண்டிருப்பது எக்காலம் ? 67 அப்புப் பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவது எக்காலம் ? 68 மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில் தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம் ? 69 வாயு அறுகோணத்தில் வாழும் மகேச்சுரனைத் தோயும் வகை கேட்கத் தொடங்குவதும் எக்காலம் ? 70 வட்டவழிக்குள்ளே மருவும் சதாசிவத்தைக் கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம் ? 71 உச்சிக் கிடை நடுவே ஓங்கும் குருபதத்தை நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி எக்காலம் ? 72 பாராகிப் பார்மீதில் பஞ்சவன்னம் தானாகி வேராகி நீமுளைத்த வித்தறிவது எக்காலம் ? 73 கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதி எல்லாம் சுட்டறுத்து நிட்டையிலே தூங்குவதும் எக்காலம் ? 74 கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம் ? 75 அட்டகாசம் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே பட்டபாடு அத்தனையும் பகுத்தறிவது எக்காலம் ? 76 அறிவுக் கருவியுடன் அவத்தைபடும் பாட்டை எல்லாம் பிறிவுபட இருத்திப் பெலப்படுவது எக்காலம் ? 77 பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமாய்ப் பேதம் பலவிதமும் பிரித்தறிவது எக்காலம் ? 78 தோன்றாசை மூன்றும் பிரிந்தறிவது எக்காலம் ? ஊன்றாசை வேரை அடிஊடறுப்பது எக்காலம் ? 79 புன்சனனம் போற்றூ முன்னே புரிவட்டம் போகில் இனி என் சனனம் ஈடேறும் என்றறிவது எக்காலம் ? 80 நட்ட நடுவில்நின்று நல்திரோதாயி அருள் கிட்டவழி காட்டிக் கிருபை செய்வது எக்காலம் ? 81 நானே நான் என்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி நானே வெளிப்படுத்தித் தருவன் என்பதும் எக்காலம் ? 82 அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவது எக்காலம் ? 83 ஐந்து பொறிவழிபோய் அலையும் இந்தப் பாழ்மனத்தை வெந்து விழப் பார்த்து விழிப்பது இனி எக்காலம் ? 84 இனமாண்டு சேர்திருந்தோர் எல்லோரும் தாமாண்டு சினமாண்டு போக அருள் தேர்ந்திருப்பது எக்காலம் ? 85 அமையாமனம் அமையும் ஆனந்த வீடுகண்டு அங்கு இமையாமல் நோக்கி இருப்பது எக்காலம் ? 86 கூண்டுவிழும் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல் மாண்டுவிழும் முன்னே நான் மாண்டிருப்பது எக்காலம் ? 87 ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகுமுன்னம் நான் இறந்து போக இனி நாள் வருவது எக்காலம் ? 88 கெட்டுவிடும் மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்து சுட்டுவிடுமுன் என்னைச் சுட்டிருப்பது எக்காலம் ? 89 தோல் ஏணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல் நூல் ஏணி வைத்தேறி நோக்குவதும் எக்காலம் ? 90 வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல் தாயோடு கண்மூடி தழுவி நிற்பது எக்காலம் ? 91 காசினியெலாம் நடந்து கால் ஓய்ந்து போகாமல் வாசிதனில் ஏறிவருவது இனி எக்காலம் ? 92 ஒலிபடரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பிச் சுழுமுனையின் தாள்திறந்து தூண்டுவதும் எக்காலம் ? 93 இடைபிங் கலைநடுவே இயங்கும் சுழுமுனையில் தடை அறவே நின்று சலித்தருப்பது எக்காலம் ? 94 மூலநெருப்பைவிட்டு மூட்டு நிலா மண்டபத்தில் பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம் ? 95 ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவி செல்ல ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம் ? 96 பஞ்சரித்துப் பேசும்பல்கலைக்கு எட்டாப் பொருளில் சஞ்சரித்துப் வாழ்ந்து தவம் பெறுவது எக்காலம் ? 97 மலமும் சலமும்அற்று மாயை அற்று மானம் அற்று நலமும் குலமும் அற்று நான் இருப்பது எக்காலம் ? 98 ஓடாமல் ஓடி உலகை வலம் வந்து சுற்றித் தேடாமல் என்னிடமாய்த் தெரிசிப்பது எக்காலம் ? 99 அஞ்ஞானம் விட்டே, அருள் ஞானத்து எல்லைதொட்டு மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவது எக்காலம் ? 100 வெல்லும்மட்டும் பார்த்து, வெகுளியெலாம் விட்டு அகன்று சொல்லுமட்டும் சிந்தை செலுத்துவது எக்காலம் ? 101 மேலாம் பதம்தேடி மெய்ப்பொருளை உள்இருத்தி நாலாம் பதம் தேடி நான் பெறுவது எக்காலம் ? 102 எண்ணாத தூரம் எல்லாம் எண்ணி எண்ணிப் பாராமல் கண்ணாடிக்குள் ஒளிபோல கண்டறிவது எக்காலம் ? 103 என்னை அறிந்து கொண்டே எங்கோமானோடு இருக்கும் தன்மை அறிந்து சமைந்திருப்பது எக்காலம் ? 104 ஆறு ஆதாரம் கடந்த ஆனந்தப் பேரொளியை பேறாகக் கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம் ? 105 ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகாமுன் காணுதலால் இன்பமற்றுக் கண்டறிவது எக்காலம் ? 106 மும்மலமும் சேர்ந்து முளைத்தெழுந்த காயம் இதை நில்மலமாய்க் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம் ? 107 முன்னை வினை கெடவே மூன்று வகைக் காட்சியினால் உன்னை வெளிப்படுத்தி உறுவது இனி எக்காலம் ? 108 கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும் விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம் ? 109 கனவு கண்டால் போல் எனக்குக் காட்டி மறைத்தே இருக்க நினைவைப் பரவெளியில் நிறுத்துவது எக்காலம் ? 110 ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும் பார் என்று சொன்னதுவும் பகுத்தறிவது எக்காலம் ? 111 நினைக்கும் நினைவுதோறும் நிறைந்த பரிபூரணத்தை முனைக்குமேல் கண்டு கண்ணில் முத்துதிர்ப்பது எக்காலம் ? 112 முப்பாழும் பாழாய், முதற்பாழும் சூனியமாய் அப்பாழும் பாழாய் அன்பு செய்வது எக்காலம் ? 113 சீ யென்று எழுந்து தெளிந்து நின்ற வான் பொருளை நீ யென்று கண்டு நிலை பெறுவது எக்காலம் ? 114 வவ்வெழுத்தும் மவ்வெழுத்தும் வாளாகும் சிவ்வெழுத்தும் அவ்வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம் ? 115 எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே அழுத்தமாய்ச் சிந்தையை வைத்தன்பு கொள்வது எக்காலம் ? 116 அருளாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம் ? 117 நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம் தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம் ? 118 என் மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த பின்பு தன் மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம் ? 119 ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல் வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம் ? 120 ஒளிஇட்ட மெய்ப்பொருளை உள் வழியிலே அடைத்து வெளியிட்டுச் சாத்திவைத்து வீடு உறுவது எக்காலம் ? 121 காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல் பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம் ? 122 பித்தாயம் கொண்டு பிரணவத்தை ஊடறுத்துச் செந்தாரைப் போலே திரிவது இனி எக்காலம் ? 123 ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள் எலும்பாய்க் கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் ? 124 ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம் ? 125 சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிக் காற்று ஊதும் துருத்தியைப் போட்டு உனை அடைவது எக்காலம் ? 126 ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல் ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் ? 127 கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப் புல்லாய் பிறந்த சென்மம் போதும் என்பது எக்காலம் ? 128 தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில் பக்குவமாய் நின் அருளைப் பார்த்திருப்பது எக்காலம் ? 129 தூரோடு அசைந்து சுழன்று வரும் தத்துவத்தை வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம் ? 130 பாகம் நடு மாறிப் பாயந்தெழுந்த சித்திரத்தை ஏகநடு மூலத்து இருத்துவதும் எக்காலம் ? 131 ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று பேரின்ப வீடுகண்டு பெற்றிப்பது எக்காலம் ? 132 காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்ததெல்லாம் பூரணமாக் கண்டு புகழ்ந்திருப்பது எக்காலம் ? 133 ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின் நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம் ? 134 குறியாகக் கொண்டு குலம் அளித்த நாயகனைப் பிரியாமல் சேர்ந்து பிறப்பறுப்பது எக்காலம் ? 135 மத்தடுத்து நின்ற மருள் ஆடு வார் போல பித்தடுத்து நின் அருளைப் பெற்றிப்பது எக்காலம் ? 136 சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ் வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம் ? 137 என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திரநின் தன்னை அறிந்து தவம் பெறுவது எக்காலம் ? 138 உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம் ? 139 வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல் பூசித்தும் தோன்றாப் பொருள் காண்பது எக்காலம் ? 140 பன்னிரண்டு கால்புரவி பாய்ந்து சில்லம் தட்டாமல் பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம் ? 141 நாட்டுக்கால் இரண்டும்விட்டு நடுவுக்கால் ஊடேபோய் ஆட்டுக்கால் இரண்டினுள்ளே அமர்ந்திருப்பது எக்காலம் ? 142 பாற்சுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக் காற்பசுவை ஓட்டி அதில் கட்டி வப்பது எக்காலம் ? 143 பல இடத்தே மனதைப் பாயவிட்டுப் பாராமல் நிலவரையின் ஊடேபோய் நேர்படுவது எக்காலம் ? 144 காமக் கடல்கடந்து கரைஏறிப் போவதற்கே ஓமக் கனல்வளர்த்தி உள்ளிருப்பது எக்காலம் ? 145 உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டி லே கொளுத்தி இதயத் திருநடனம் இனிக்காண்பது எக்காலம் ? 146 வேதாந்த வேதம் எல்லாம் வீட்டேறியே கடந்து நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம் ? 147 பட்டம் அற்றுக் காதற்றில் பறந்தாடும் சூத்திரம் போல் வெட்டு வெளியாக விசும்பறிதல் எக்காலம் ? 148 அட்டாங்கயோகம் அதற்கப்பாலுக் கப்பாலாய் கிட்டாப் பொருள் அதனைக் கிட்டுவதும் எக்காலம் ? 149 ஒட்டாமல் ஒட்டிநிற்கும் உடலும் உயிரும்பிரிந்தே எட்டாப் பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம் ? 150 பாசத்தை நீக்கி பசுவைப் பதியில்விட்டு நேசத்தின் உள்ளே நினைந்திருப்பது எக்காலம் ? 151 ஆசார நேச அனுட்டானமும் மறந்து பேசாமெய்ஞ் ஞானநிலை பெற்றிருப்பது எக்காலம் ? 152 பல்லாயிரம் கோடிப் பகிரண்டம் உம்படைப்பே அல்லாது வேறில்லை என்று அறிவது இனி எக்காலம் ? 153 ஆதிமுதல் ஆகிநின்ற அரிஎன்ற அட்சரத்தை ஓதி அறிந்துள்ளே உணர்வது இனி எக்காலம் ? 154 சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம் ? 155 அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து சொல்லும் உரைமறந்து தூங்குவதும் எக்காலம் ? 156 இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெ யும்போல முயங்கும் அந்த வேத முடிவு அறிவது எக்காலம் ? 157 ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகும் தானாகி நின்றதனை அறிவது எக்காலம் ? 158 என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம் ? 159 இன்னதென்று சொல்லஒண்ணா எல்லையற்ற வான் பொருளைச் சொன்னதென்று நான் அறிந்து சொல்வது இனி எக்காலம் ? 160 மனதைஒரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி என தறிவைஅம்பாக்கி எய்வது இனி எக்காலம் ? 161 என்னை இறக்கஎய்தே என்பழியை ஈடழித்த உன்னை வெளியில் வைத்தேஒளித்து நிற்பது எக்காலம் ? 162 கடத்துகின்ற தோணிதனைக் கழைகள் குத்தி விட்டாற்போல் நடத்துகின்ற சித்திரத்தை நான்அறிவது எக்காலம் ? 163 நின்றநிலை பேராமல், நினைவில்ஒன்றும் சாராமல் சென்றநிலை முத்தி என்று சேர்ந்தறிவது எக்காலம் ? 164 பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தைஉள் அமைத்து மின்னும் ஒளிவெளியே விட்டு அடைப்பது எக்காலம் ? 165 கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டதுபோல் வீட்டில்அடை பட்டுஅருளை வேண்டுவதும் எக்காலம் ? 166 கடலில்ஒளித்திருந்த கனல்எழுந்து வந்தாற்போல் உடலில்ஒளித்த சிவம்ஒளி செய்வது எக்காலம் ? 167 அருணப் பிரகாசம் அண்டஎங்கும் போர்த்தது போல் கருணைத் திருவடியில் கலந்து நிற்பது எக்காலம் ? 168 பொன்னில் பலவிதமாம் பூடணம்உண்டானது போல் உன்னில் பிறந்து உன்னில்ஒடுங்குவதும் எக்காலம் ? 169 நாயிற் கடைப்பிறப்பால் நான்பிறந்த துன்பம்அற வேயில் கனல் ஒளிபோல் விளங்குவதும் எக்காலம் ? 170 சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சைச் சுட்டதுபோல் ஆரியந்தோற்றத்து அருள் பெறுவது எக்காலம் ? 171 இரும்பினில் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க் கரும்பில் சுவைரசத்தைக் கண்டறிவது எக்காலம் ? 172 கருக்கொண்ட முட்டைதனைக் கடல் ஆமைதான் நினைக்க உருக்கொண்ட வாறதுபோல்உனை அடைவது எக்காலம் ? 173 வீடுவிட்டு பாய்ந்து வெளியில் வருவார்போல் கூடுவிட்டுப் பாயும் குறிப்பறிவது எக்காலம் ? 174 கடைந்த வெண்ணய் மோரில் கலவாதவாறதுபோல் உடைந்து தமியேன் உனைக்காண்பது எக்காலம் ? 175 இருளை ஒளி விழுங்கி ஏகஉருக் கொண்டாற்போல் அருளை விழுங்கும்இருள் அகன்று நிற்பது எக்காலம் ? 176 மின் எழுந்து மின்ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல் என்னுள் நின்றதுஎன்னுள்ளே யான் அறிவது எக்காலம் ? 177 கண்ட புனல்குடத்தில் கதிர் ஒளிகள் பாய்ந்தாற்போல் கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவது எக்காலம் ? 178 பூணுகின்ற பொன் அணிந்தால் பொன்சுமக்குமோ உடலை காணுகின்றஎன் கருத்தில் கண்டறிவது எக்காலம் ? 179 செம்பில் களிம்புபோல் சிவத்தைவிழுங்கி மிக வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம் ? 180 ஆவியும் காயமும்போல் ஆத்துமத்தில் நின்றதனை பாவிஅறிந்து மனம் பற்றி நிற்பது எக்காலம் ? 181 ஊமை கனாக்கண்டு உரைக்கஅறியா இன்பம்அதை நாம்அறிந்து கொள்வதற்கு நாள் வருவதுஎக்காலம் ? 182 சாகாச் சிவனடியைத் தப்பாதார் எப்போதும் போகா உடல்அகன்று போவதென்பது எக்காலம் ? 183 நிட்டைதனை விட்டு நினைவறிவு தப்பவிட்டு வெட்ட வெளியில்விரவி நிற்பது எக்காலம் ? 184 வெட்டவெளி தன்னில்விளைந்த வெறும் பாழ் திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம் ? 185 எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் வடிவாய்க் கங்குல்பகல் இன்றிஉனைக் கண்டிருப்பது எக்காலம் ? 186 உண்டதுவும் மாதருடன் கூடிச்சேர்ந்து இன்பம் கண்டதுவும் நீயெனவேகண்டு கொள்வது எக்காலம் ? 187 ஈம்என்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும் ஓம்என்று சொன்னதுவும் உற்றறிவது எக்காலம் ? 188 சத்தம் பிறந்த இடம் தன் மயமாய் நின்ற இடம் சித்தம் பிறந்தஇடம் தேர்ந்தறிவது எக்காலம் ? 189 போக்கு வரவும் புறம்புள்ளும் ஆகிநின்றும் தாக்கு ஒரு பொருளைச் சந்திப்பது எக்காலம் ? 190 நான் எனவும் நீ எனவும் நாம் இரண்டு மற்றொன்றும் நீ எனவே சிந்தைதனில் நேர்படுவது எக்காலம் ? 191 அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில் பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம் ? 192 நீடும் புவனம் எல்லாம் நிறைந்துசிந் தூரம் அதாய் ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம் ? 193 தித்தி என்ற கூத்தும் திருச்சிலம்பின் ஓசைகளும் பத்தியுடனே கேட்டுப் பணிவது இனி எக்காலம் ? 194 நயனத்திடை வெளிபோல் நண்ணும் பரவெளியில் சயனித் திருந்து தலைப்படுவது எக்காலம் ? 195 அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில் திருவிளையாடல்கண்டு தெரிசிப்பது எக்காலம் ? 196 மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கதுபோல் தேனைமிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம் ? 197 பொல்லாத காயம் அதைப் போட்டு விடுக்குமுன்னே கல் ஆவின் பால்கறப்பக் கற்பது இனி எக்காலம் ? 198 வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக் கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம் ? 199 பேரறிவிலே மனதைப் பேராமலே இருத்தி ஓரறிவில் என்னாளும் ஊன்றி நிற்பது எக்காலம் ? 200 அத்துவிதம் போலும் என்றன் ஆத்துமத்தின் உள்ளிருந்து முத்தி தர நின்றமுறை அறிவது எக்காலம் ? 201 நான்நின்ற பாசம்அதில் நான்இருந்து மாளாமல் நீநின்ற கோலம்அதில் நிரவிநிற்பது எக்காலம் ? 202 எள்ளும்கரும்பும் எழில்மலரும் காயமும்போல் உள்ளும் புறம்புநின்று உற்றறிவது எக்காலம் ? 203 அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்பதுபோல் என்னை வகுத்து உன்னை இனிக்காண்பது எக்காலம் ? 204 அந்தரத்தில் நீர்பூத்து அலர்ந்தெழுந்த தாமரைபோல் சிந்தை வைத்துக் கொண்டு தெரிசிப்பது எக்காலம் ? 205 பிறப்பும் இறப்பும்அற்றுப் பேச்சும்அற்று மூச்சும்அற்று மறப்பும் நினைப்பும்அற்று மாண்டிருப்பது எக்காலம் ? 206 மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்துஅறிவை என்னுள் ஒருநினைவை எழுப்பிநிற்பது எக்காலம் ? 207 ஆசை கொண்ட மாதர் அடைகனவு நீக்கி உன்மேல் ஓசை கொண்டு நானும் ஒடுங்குவதும் எக்காலம் ? 208 தன்உயிரைக் கொண்டு தான் திரிந்த வாறதுபோல் உன்உயிரைக் கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம் ? 209 சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலைஇனிக் காற்றில்உழல் சூத்திரமாய் காண்பது இனி எக்காலம் ? 210 என் வசமும்கெட்டு இங்கிருந்த வசமும் அழிந்து தன்வசமும் கெட்டு அருளைச் சார்ந்து இருப்பது எக்காலம் ? 211 தன்னை மறந்து தலத்து நிலை மறந்து கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம் ? 212 என்னை என்னிலே மறந்தே இருந்த பதியும் மறந்து தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம் ? 213 தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே உன்னை நினைந்துள்ளே உறங்குவதும் எக்காலம் ? 214 இணை பிரிந்தபோதல் இன்பமுறும் அன்றிலைப்போல் துணை பிரிந்தபோது அருள் தூல்தொடர்ந்து கொள்வது எக்காலம் ? 215 ஆட்டம்ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல் தேட்டம் அற்ற வான்பொருளைத்தேடுவதும் எக்காலம் ? 216 முன்னை வினையால் அறிவுமுற்றாமல் பின் மறைந்தால் அன்னை தனைத்தேடி அமுதுண்பது எக்காலம் ? 217 கள்ளுண்டவர்போல் களிதரும் ஆனந்தம்அதால் தள்ளுண்டு நின்றாடித் தடைப்படுவது எக்காலம் ? 218 நான் அவனாய்க் காண்பதெல்லாம்ஞானவிழியா ல்அறிந்து தான் அவனாய் நின்று சரண் அடைவது எக்காலம் ? 219 தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவில் ஆனந்தம் கண்டே அமர்ந்திருப்பது எக்காலம் ? 220 உற்ற வெளிதனிலே உற்றுப் பார்த்து அந்தரத்தே மற்றமற மாய்கை மாள்வது இனி எக்காலம் ? 221 ஏடலர்ந்து பங்கயமும் இருகருணை நேத்திரமும் தோடணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம் ? 222 ஐயாறும் ஆறும் அகன்று வெறுவெளியில் மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம் ? 223 காட்டும்அருள் ஞானக்கடலில் அன்புக் கப்பல்விட்டு மூட்டும் கருணைக் கடலில் மூழ்குவதும் எக்காலம் ? 224 நான் யாரோ நீ யாரோ நன்றாம் பரமான தான் யாரோ என்றுஉணர்ந்து தவம்முடிப்பது எக்காலம் ? 225 எவர் எவர்கள் எப்படிக் கண்டுஎந்தப்படி நினைத்தார் அவர் அவர்க்குஅப்படி நின்றாய் என்பது எக்காலம் ? 226 உற்றுற்றுப் பார்க்க ஒளிதரும் ஆனந்தம்அதை நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பது இனி எக்காலம் ? 227 விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல் களங்கமற உன்காட்சி கண்டறிவது எக்காலம் ? 228 என்னையே நான் அறியேன் இந்த வண்ணம் சொன்ன தெல்லாம் முன்னையோர் கைக்கொள்ள முன்பணிவது எக்காலம் ? 229 மாயத்தை நீக்கி வருவினையைப் பாழாக்கி காயத்தை வேறாக்கி காண்பதுஉனை எக்காலம் ? 230 ஐஞ்சு கரத்தானை அடி இணையைப் போற்றிசெய்து நெஞ்சில் பொருத்தி நிலைபெறுவது எக்காலம் ? 231