முருகா கந்தரநுபூதி காப்பு நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவோம். நூல் ஆடும் பரிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா வருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியானை சகோதரனே. 1 உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனு நீ யலையோ எல்லாமற என்னை யிழந்த நலஞ் சொல்லாய் முருகா சுரபூ பதியே. 2 வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந் தானோ பொருளா வதுசண் முகனே. 3 வளைபட்ட கைம் மாதொடு மக்க ளெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியுந் தொளைபட்ட டுருவத் தொடுவே லவனே. 4 மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங்குவதே. 5 திணியா னமனோ சிலைமீ துனதாள் அணியா ரரவிந்த மரும்புமதோ பணியா வென வள்ளி பதம்பணியுந் தணியா வதிமோக தயாபரனே. 6 கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7 அமரும் பதிகே ளகமா மெனுமிப் பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம்பொரு தானவ நாசகனே. 8 மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப் பட்டூசல் படும் பரிசென் றொழிவேன் தட்டூ டறவேல் சயிலத் தெறியும் நிட்டூர நிராகுல நிர்ப் பயனே. 9 கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே. 10 கூகா வெனவென் கிளைகூடி யழப் போகா வகை மெய்ப் பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலுகவித் தியாகா சுரலோக சிகாமணியே. 11 செம்மான் மகளைத் திருடந் திருடன் பெம்மான் முருகன் பிறவா னிறவான் சும்மா இரு சொல் லறவென் றலுமே அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. 12 முருகன் தனிவேல் முனிநங் குருவென் றருள்கொண் டறியா ரறியுந் தரமோ உருவன் றருவன் றுளதன் றிலதன் றிருளன் றொளியன் றெனநின் றதுவே. 13 கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற் றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய் மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம் ஐவாய் வழி செல்லும வாவினையே. 14 முருகன் குமரன் குகனென்று மொழிந் துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய் பொருபுங் கவரும் புவியும் பரவுங் குருபுங்கவ எண்குண பஞ்சரனே. 15 பேராசை யெனும் பிணியிற் பிணிபட் டோரா வினையே னுழலத் தகுமோ வீரா முதுசூர் படவே லெறியுஞ் சூரா சுரலோக துரந்தரனே. 16 யாமோதிய கல்வியு மெம்மறிவுந் தாமே பெற வேலவர் தந்தனாற் பூமேல் மயல்போ யறமெய்ப் புணர்வீர் நாமே னடவீர் நடவீ ரினியே. 17 உதியா மரியா வுணரா மறவா விதிமா லறியா விமலன் புதல்வா அதிகா வநகா வபயா வமரா பதிகா வலசூர பயங் கரனே. 18 வடிவுந் தனமும் மனமும் குணமுங் குடியுங் குலமுங் குடிபோ கியவா அடியந் தமிலா அயில்வே லரசே மிடியென்றொரு பாவி வெளிப்படினே. 19 அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன் உரிதா வுபதேச முணர்த் தியவா விரிதாரண விக்ரம வேளிமையோர் புரிதாரக நாக புரந்தரனே. 20 கருதா மறவா நெறிகாண எனக் கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய் வரதா முருகா மயில்வா கனனே விரதா சுரசூர விபாட ணனே. 21 காளைக் குமரேச னெனக் கருதித் தாளைப் பணியத் தவமெய் தியவா பாளைக் குழல் வள்ளி பதம்பணியும் வேளைச் சுரபூபதி மேருவையே. 22 அடியைக் குறியா தறியா மையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக் ரமவேல் மகிபா குறமின் கொடியைப் புணருங் குணபூ தரனே. 23 கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும் போர்வேல புரந்தர பூபதியே. 24 மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந் தையோ அடியே னலையத் தகுமோ கையோ அயிலோ கழலோ முழுதுஞ் செய்யோய் மயிலேறிய சேவகனே. 25 ஆதார மிலே னருளைப் பெறவே நீதா னொரு சற்று நினைந்திலையே வேதாகம ஞான விநோத மனோ தீதா சுரலோக சிகாமணியே. 26 மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயனிங் கிதுவோ பொன்னே மணியே பொருளே யருளே மன்னே மயிலேறிய வானவனே. 27 ஆனா அமுதே அயில்வே லரசே ஞான கரனே நவிலத் தகுமோ யானாகிய என்னை விழிங்கி வெறுந் தானாய் நிலைநின் றதுதற் பரமே. 28 இல்லே யெனுமாயையி லிட்டனைநீ பொல்லே னறியாமை பொறுத்திலையே மல்லேபுரி பன்னிரு வாகுவிலென் சொல்லே புனையுஞ் சுடர் வேலவனே. 29 செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன் றொவ்வா ததென வுணர்வித் ததுதான் அவ்வா றறிவா ரறிகின் றதலால் எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே. 30 பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே வீழ்வா யென என்னை விதித்தனையே தாழ்வா னவைசெய் தனதா முளவோ வாழ்வா யினிநீ மயில்வா கனனே. 31 கலையே பதறிக் கதறித் தலையூ டலையே படுமா றதுவாய் விடவோ கொலையே புரிவேடர் குலப் பிடிதோய் மலையே மலைகூறிடு வாகையனே. 32 சிந்தா குலவில் லொடுசெல் வமெனும் விந்தா டவியென்று விடப் பெறுவேன் மந்தா கினிதந்த வரோ தயனே கந்தா முருகா கருணா கரனே. 33 சிங்கார மடந்தையர் தீநெறிபோய் மங்காமலெனக்கு வரந் தருவாய் சங்க்ராம சிகாவல சண் முகனே கங்கா நதி பால க்ருபாகரனே. 34 விதிகாணு முடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய் மதிவா ணுதல்வள் ளியையல் லதுபின் துதியா விரதா சுரபூ பதியே. 35 நாதா குமரா நமவென் றரனார் ஓதா யெனவோ தியதெப் பொருள்தான் வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப் பாதா குறமின் பதசே கரனே. 36 கிரிவாய் விடுவிக்ரம வேளிமையோர் பரிவா ரமெனும் பதமே வலையே புரிவாய் மனனே பொறையா மறிவால் அரிவா யடியோடு மகந்தையையே. 37 ஆதாளியை யொன் றறியே னையறத் தீதாளியை யாண்டதுசெப் புமதோ கூதாள கிராத குலிக் கிறைவா வேதாள கணம் புகழ்வே லவனே. 38 மாவேழ் சனனங் கெடமா யைவிடா மூவேடணை யென்று முடிந்திடுமோ கோவே குறமின் கொடிதோள் புணருந் தேவே சிவசங்கர தேசிகனே. 39 வினையோட விடுங் கதிர்வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங்கிடவோ சுனையோ டருவித் துறையோ டுபசுந் தினையோ டிதணோடு திரிந்தவனே. 40 சாகா தெனையே சரணங் களிலே காகா நமனார் கலகஞ் செயுநாள் வாகா முருகா மயில்வா கனனே யோகா சிவஞா னொபதேசிகனே. 41 குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த் திடலுஞ் செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற் றறிவற் றறியாமையு மற்றதுவே. 42 தூசா மணியுந் துகிலும் புனைவாள் நேசா முருகா நினதன் பருளால் ஆசா நிகளந் துகளா யினபின் பேசா அநுபூதி பிறந்ததுவே. 43 சாடுந் தனிவேல் முருகன் சரணஞ் சூடும் படிதந் ததுசொல் லுமதோ வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங் காடும் புனமுங் கமழும் கழலே. 44 கரவா கியகல்வி யுளார் கடைசென் றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ குரவா குமரா குலிசா யுதகுஞ் சரவா சிவயோக தயாபரனே. 45 எந்தாயு மெனக் கருள்தந் தையுநீ சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள் கந்தா கதிர்வே லவனே யுமையாள் மைந்தா குமரா மறைநா யகனே. 46 ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப் பேறா வடியேன் பெறுமா றுளதோ சீறா வருசூர் சிதைவித் திமையோர் கூறா வுலகங் குளிர்வித் தவனே. 47 அறிவொன் றறநின் றறிவா ரறிவிற் பிறிவொன் றறநின் றபிரா னலையோ செறிவொன் றறவந் திருளே சிதைய வெறிவென்றவ ரோடுறும் வேலவனே. 48 தன்னந் தனிநின் றதுதா னறிய இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே. 49 மதிகெட் டறவா டிமயங் கியறக் கதிகெட் டவமே கெடவோ கடவேன் நதிபுத் திர ஞான சுகாதிபவத் திதிபுத் திரர்வீ றடுசே வகனே. 50 உருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய்க் கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவா யருள்வாய் குகனே. 51