Site hosted by Angelfire.com: Build your free website today!

அனுதின மன்னா

4th May 2009

நேரத்தின் அருமை



“உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும் உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.” யோபு 8:7.

ஹலோ நண்பர்களே! இன்றிலிருந்த ஒரு புதிய துவக்கம். தமிழில் தினமும் நெட் மூலமாக தின தியானங்கள் அனுப்பப் போகிறோம். அனைவருக்கும் சந்தோஷமாயிருக்கும் என நம்புகிறோம். கர்த்தருடைய பெரிதான கிருபை இது. ஆரம்பம் அற்பமாயிருந்தாலும் முடிவு சம்பூரணமாயிருக்கும் ஆமென்!!

ஒரு வங்கி தினமும் 10,000 தினாரை உங்கள் கணக்கில் கொடுப்பதாகவும் , அதை அந்த நாளில் செலவழிக்க வேண்டும் என்றும், செலவழிக்காவிட்டால் அந்த பணம் கழிக்கப்பட்டு போவதாகவும் கூறுவதாக வைத்துக் கொள்வோம். நாம் என்ன செய்வோம்? அந்த பணம் வந்தவுடன் அதை உடனே எடுத்து வைத்துக் கொள்வோம் அல்லவா?

அதுப்போலத்தான் ஒவவொரு நாளும் தேவன் நமது கணக்கில் 86,000 நொடிகளை கிருபையாய் கொடுக்கிறார். அதை நாம் சரியான வழியில் உபயோகிக்காத பட்சத்தில் அது நமக்கு வீணாக கழித்துப் போடப்படுகிறது.

போன நேரத்தை நாம் திரும்ப பெற முடியுமா? ஆகையால் நமக்கு கொடுக்கப்பட்ட அருமையான நேரத்தை ஞானமாக, மகிழ்ச்சியாக, வெற்றியாக செலவழிப்போம். உங்களுக்குத் தெரியுமா?

ஒருவருடத்தின் அருமையை அறிந்துக் கொள்ள ஒரு வருடம் பள்ளியில் தோல்வியுற்ற மாணவனிடம் கேட்க வேண்டும்.

ஒரு மாதத்தின் அருமையை அறிந்துக் கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பே பிள்ளையை பெற்றெடுத்த தாயிடம் கேட்க வேண்டும்.

ஒரு வாரத்தின் அருமையை அறிந்துக் கொள்ள ஒரு வாரப் பத்திரிக்கையின் ஆசிரியரிடம் கேட்க வேண்டும்.

ஒரு நிமிடத்தின் அருமையை அறிந்துக் கொள்ள தனது வேலை நேர ரயிலை தவறவிட்ட மனிதனிடம் கேட்க வேண்டும!;

ஒரு நொடியின் அருமையை அறிந்துக் கொள்ள தனது காரின் பெரிய மோதலை தவிர்த்த மனதனிடம் கேட்க வேண்டும்!

ஒரு வாழ்நாளின் அருமையை அறிந்துக் கொள்ள மறுமையில் வெறுங்கையாய தேவனிடம் கணக்கு ஒப்புக் கொடுக்கும்போது; அறிந்துக் கொள்வோம்.

ஒருவருக்காகவும் நேரம் காத்திருப்பதில்லை. ஆகையால் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக செலவழிப்போம். ஆத்துமாக்களை தேவனிடம் கொண்டு சேர்ப்போம். ஆங்கிலத்தில் சொல்வார்கள்: ‘ Yesterday is History, Tomorow is a Mystery, Today is a gift. That’s why it is called the ‘Present’

ஜெபம்:

எங்கள் நல்ல தகப்பனே, தமிழில் இந்த தின தயானம் வெளிவர கிருபை செய்தீரே ஸ்தோத்திரம். நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். எங்கள் விண்ணப்பத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். அவர்களுடைய Email Id -யை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்

அனுதின மன்னா குழு




மே 5-ம் தேதி 2009 - செவ்வாய் கிழமை - May 5th, 2009, Tuesday

நற்கந்த வாசைன



இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்- களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம் - (2 கொரி 2:15)

புத்தம் புதிய இந்நன்நாளில் தமது புத்தம் புதிய கிருபைகளை தருகின்ற புனிதராகிய இயேசுகிறிஸ்துவின் நல் நாமத்தில் வாழ்த்துக்கள். மே மாதம் ஆரம்பித்து விட்டது. கொடும் வேனிற் காலமும் ஆரம்பித்து விட்டது. கொடும் சூட்டிலிருந்து தப்பிக்க தேவன் நமக்கு கிருபை செய்வாராக.

அது ஒரு பல மாடி கட்டிட அலுவலகத்தில் வேலை ஆரம்பிக்கும் நேரம். நேரமாகிவிட்டபடியால் அங்கு வேலை செய்ய வரும் மக்கள், வேகவேகமாய் வேர்த்துக் கொட்ட வந்து லிப்டில் ஏறுகிறார்கள். கூட்ட நெரிசலினால் ஒரு இறுக்கமான சூழ்நிலை. வேர்வை நாற்றம், இட நெருக்கடி. அப்போது ஒரு பெண் ஓடிவந்து ஏறுகிறாள். லிப்டை மூடும் நேரம், ஆனால் அவள் வந்தவுடன் புன்னகையுடன் லிப்டை நடத்துபவன் திறந்து வழிவிடுகிறான்.

இடமில்லாவிட்டாலும் அந்த பெண் முட்டி மோதி இடத்தைப் பிடித்து விடுகிறாள். அத்தனை நேரம் அமைதியின்றி நெரிசலில் நின்றிருந்த கூட்டத்தினர் மத்தியில் ஒரு அமைதி, அந்த இறுக்கம் நெகிழ ஆரம்பித்தது. ஏன் தெரியுமா? கடைசியாக ஏறின பெண் உற்சாகமாய் மற்றவர்களோடு பேச ஆரம்பித்தாள். தனது இனிய புன்முறுவலினால் மற்றவர்களை உற்சாகப்படுத்தினாள். அவளிடமிருந்து புறப்பட்ட அந்த வாசைன இறுக்கமாய் இருந்து மக்களிடையே ஒரு வித்தியாசத்தை உண்டு பண்ணினது.

பிரியமானவர்களே! இந்த கவலையான, நம்பிக்கையற்ற உலகத்தில் நாம் ஒரு நற்கந்தமாய் வாசைன வீச முடியும்.

யோவான் 12:3ல் “அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது “ எனப் பார்க்கிறோம். உங்கள் வீடு கிறிஸ்துவின் நறுமணத்தினால் நிறைந்திருக்கிறதா? உங்கள் வேலையிடங்களில் உங்கள் வரவு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? சோர்ந்து போயிருக்கிற மக்கள் மத்தியில் நல்மணம் வீசும் புது மலராக கிறிஸ்து உங்களுக்குள்ளிருந்து பரிமளிப்பாராக!

“ சேற்றினின்றென்னை தூக்கியெடுத்து நல்மணம் வீசும் நல் மலராக்கினீர். உம் அன்பல்லவோ என்னை மாற்றினது. ” ஜெபம்:

எங்கள் அன்பின் பரம பிதாவே, என் வாழ்க்கை, சேற்றிலும், துர் வாழ்விலும் நாற்றம் வீசும் மக்கள் மத்தியில் ஒரு நல்மணம் வீசும் நறுமலராக வாசைன வீசட்டும். அதைக் கண்டு அநேகர் உம்மை அறிந்துக் கொள்வார்களாக. எங்கள் விண்ணப்பத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். அவர்களுடைய Email Id -யை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு ;




6th May 2009

மே 6-ம் தேதி 2009 - புதன் கிழமை

நமது தேவை




நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன் - (யோவான் 14:13)

ஐந்து வயது நிரம்பிய வில்லியம், தன் தாயுடன் தனது பிறந்த நாளுக்காக பொம்மை கடைக்குச் சென்று தனக்கு பிடித்த விளையாட்டுச் சாமான் வாங்கச் சென்றான். அங்கு அநேக பொம்மைகளும் விளையாட்டுச் சாமானங்களும் நிரம்பி இருந்தன. அதில் அவனுக்கு விருப்பமான, கலர்கலர் விளக்குகளுடன் விதவிதமான சத்தங்களுடன் வேகமாய் செல்லும் கார் இருந்தது. அதைக் கண்டவுடன் அவன் தன் தாயிடம் அடம் பிடித்து இந்த கார்தான் எனக்கு வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்தான். தாயும் பார்க்கலாம் என்று கூறி விட்டு பின்பு வீடு திரும்பினார்கள்.

அடுத்த நாள் பிறந்தநாள் பரிசாக அவன் விரும்பிய அதே கார் அவனுக்கு கொடுக்கப்பட்டது. அதைக் கண்ட அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அப்பொழுது அவன் சகோதரன் ஷ அட மடையா! இந்த காருக்கே நீ இவ்வளவு சந்தோஷப்படுகிறாயே, அம்மா உனக்கு இதைவிட பெரிதான ரிமோட் கண்ட்ரோல் கார் வாங்கி கொடுக்க இருந்தார்கள். ஆனால் நீ இதை வாங்க வற்புறுத்தியதால் இதை வாங்கிக் கொடுத்தார்கள்|| என்றான். அதைக் கேட்டபோது வில்லியத்தின் இருதயம் கனத்தது.

இதைப் போலத்ததான் நாம் தேவனிடம் நமது தேவையை கதறி, கெஞ்சி கேட்டுப் பெற்றுக் கொள்கிறோம். கர்த்தரும் அதைத் தருகிறார். ஆனால் தேவன் ஒருவேளை நாம் கேட்டதைவிட நன்மையானதை கொடுக்கச் சித்தமாயிருந்திருப்பார். ஆனால் நம் ஜெபம் அதை தடை செய்திருக்கும். நாம் ஜெபிக்கும்போது “உம்முடைய சித்தத்தின்படி எங்களுக்கு வாய்க்கச் செய்யும்” ஆண்டவரே என்று அவருடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபிக்கும் போது அவர் நன்மையானவற்றையே நமக்கு தர வல்லவராயிருக்கிறார்.

நம் தேவனுக்கு கொடுக்க முடியாத பெரிய தேவை என்று ஒன்றுமில்லை. ஆகையால் பெரிய காரியங்களுக்காக ஜெபிப்போம் பெரிய பதிலை பெற்றுக் கொள்வோம்.

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக பிதாவே, இந்த நாளுக்காக உமக்கு ஸ்தோத்திரம். பெரிய தேவனிடமிருந்து பெரிய காரியங்களை பெற்றுக் கொள்ள எங்களை எழுப்பி ஏவும். எங்களது தேவைகளுக்காக மட்டுமல்ல, எங்களது தேசத்திற்காக பெரிய காரியங்களை செய்ய, பெற்றுக் கொள்ள உதவும். எங்கள் விண்ணப்பத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். அவர்களுடைய Email Id -யை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு



to add



to add